Friday, October 5, 2018

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
-
செயல்கள் என்பது எவ்வளவுநாள் வரை? கடவுளை அடையாததுவரை.அப்போது மனிதன் பாவபுண்ணியங்களைக் கடந்து செல்கிறான்.பழம் தோன்றியதும் பூ உதிர்ந்துவிடுகிறது.பழத்திற்காகத்தான் பூ பூக்கிறது.அதேபோல் கடவுளைஅடைவதுதான் செயல்களின் நோக்கம்.
-
இறைவனை எந்த அளவுக்கு நெருக்கிறாயோ அந்த அளவுக்குக் கடமைகளை அவரே குறைத்துவிடுகிறார்.மருமகள் கருவுற்றால் மாமியார் படிப்படியாக வேலைகளை குறைத்துவிடுவாள்.
-
பெண்கள் அவல் குத்துவதை பார்த்திருக்கிறாயா? ஒரு கையில் உலக்கை இருக்கும் இன்னொரு கையால் உரலில் உள்ள நெல்லை விலக்கிவிடுவார்கள்.அதே நேரத்தில் பேசிக்கொண்டும் இருப்பார்கள்.மனம் முழுவதும் உலக்கை கையில் விழுந்துவிடக்கூடாது என்பதிலேயே இருக்கும்.இதற்கு நிறைய பயிற்சி தேவை.அதேபோல இல்லறத்தில் இருப்பவர்கள் மனத்தின் ஒரு பகுதியை எப்போதும் இறைவனில் வைக்க வேண்டும்.இல்லாவிட்டால் சர்வ நாசம்தான்
-
ஞானம் பெற்றபிறகு இல்லறத்தில் வாழலாம்.ஆனால் முதலில் ஞானம்பெற வேண்டும்.இல்லறமாகிய தண்ணீரில் மனமாகிய பாலை வைத்தால் கலந்துவிடும்.ஆகவே மனமாகிய பாலைத் தயிராக்கி தனிமையில்வைத்து,கடைந்து வெண்ணை எடுத்து,அதை இல்லறமாகிய தண்ணீரில் வைக்க வேண்டும்.அப்போது வெண்ணை தண்ணீரில் கலக்காது
-
ஆரம்பத்தில் சாதனைகள் செய்வது அவசியம்.அரசமரம் சிறு செடியாக இருக்கும்போது அதைச்சுற்றி வேலை அமைக்க வேண்டும்.இல்லவிட்டால் ஆடுமாடுகள் மேய்ந்துவிடும்.அதுவே பெரிதாக வளர்ந்துவிட்டால் ஒரு யானையைக்கூட அதில் கட்டி வைக்கலாம்.முதலில் ஞானம்.அதன்பின் இல்லறம்
-
ஆரம்ப காலத்தில் அவ்வப்போது தனிமையைநாட வேண்டும்.சாதனை தேவை.சோறு சாப்பிடவேண்டுமானால் சும்மா இருந்தால் நடக்குமா?விறகு சேகரிக்க வேண்டும்.தீ மூட்ட வேண்டும்.அரிசியை சமைக்க வேண்டும்.சோறு சாப்பிட  அதற்கு முன்பு எவ்வளவு வேலைகள் செய்ய வேண்டியுள்ளது
-
ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படிக்கலாம்.இறைவனிடம் பக்தி ஏற்படாவிட்டால் அவரை அடையவேண்டும் என்ற ஏக்கம் ஏற்படாவிட்டால் எல்லாம் வீண்.சாஸ்திரம் படித்த விவேக வைராக்கியம் இல்லாத பண்டிரின் நோட்டம் எல்லாம் காமத்திலும் பணத்தின்மீதும்தான் இருக்கும்.
-
எந்த அறிவைப் பெற்றால் இறைவனை அறிய முடியுமோ,அதுதான் அறிவு.பிற எல்லாம் வீண்.
-
இறைவனைப்பற்றி கேள்விப்படுவது என்பது ஒன்று,அவரைப் பார்ப்பது என்பது மற்றொன்று,அவருடன் பேசுவது என்பது வேறொன்று.பாலைப்பற்றி கேள்விப்பட்டால் போதுமா? அதை பார்த்தால் மகிழ்ச்சி வரும் குடித்தால்தானே வலிமை வரும்.இறைவனது காட்சிபெற்றால் அமைதி கிடைக்கும்.அவருடன் பேசினால் ஆனந்தம் உண்டாகும்.ஆற்றல் அதிகரிக்கும்
-
இறைவனை அடையவதற்கு உரிய வேளை வராமல் எதுவும் நடக்காது. ஒரு குழந்தை தூங்கப்போகும் முன், அம்மா தூங்கும்போது வெளிக்கு வந்தால் எழுப்பிவிடு என்றது.அதற்கு அவள் கவலைப்படாதே அந்த உணர்ச்சியே உன்னை எழுப்பிவிடும் நான் எழுப்பத் தேவையில்லை என்றாள்.
-
யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை இறைவன் அறிந்தே வைத்திருக்கிறார். நீ இறைவனுடைய திருவடிகளில் எல்லாவற்றையும் அர்ப்பணம் செய்.அவரிடம் வக்காலத்துகொடு.அவர் எது நல்லது என்று நினைக்கிறாரோ அதை செய்யட்டும்.ஒரு நல்ல மனிதனிடம் பொறுப்பைஒப்படைத்துவிட்டால் அவர் ஒருபோதும் வஞ்சிக்க மாட்டார்.

Friday, September 7, 2018

வாழ்க்கையில் எது நமக்கு சொந்தம்

கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக்கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக்கொண்டு கரையை நோக்கி நீந்தினான். அப்போது நீர்ச்சுழல் ஒன்றில் மாட்டிக்கொள்ள, கடும்போராட்டத்திற்குப் பிறகு உயிர் பிழைத்தான் ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய்விட்டது. கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்துவிட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததைப் பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவவிட்டதாகக் கூறுகிறீர்களே? என்று கேட்டார். வியாபாரி நடந்ததைக் கூறினான்.
-
துறவி சொன்னார், அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்துகொண்டு போகிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா? வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அதுதான் காரணம் என்றார்.

என்னுடைய பதிவுகளை உங்கள் மெயிலில் தவறாமல் நேரடியாக பெற உங்கள் mail id  கமெண்டில் பதிவு செய்யுங்கள். அதில் அனுப்பும் அழைப்பிதழை ஒரு முறை accept செய்தால் போதும்

Tuesday, August 28, 2018

யோகம்

யோகம்

யோகம் என்பது சித்தத்தில் ஏற்படும் விருத்திகளை அடக்குதல் என்கிறது யோக சாஸ்திரம். பதஞ்சலி முனிவர் எழுதிய இந்த நூல்தான் யோகம் என்பதன் ஆதார நூலாக விளங்குகிறது. இன்று யோகா என்றால் அது யோகாசனம் என்பதாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. நான் யோகா செய்கிறேன் என்று ஒருவர் கூறுகிறார் என்றால் அவர் ஆசனங்களைக் குறிப்பிடுகிறார் என்றுதான் பொருள்.

ஆனால் யோகா அல்லது யோகம் என்பது வெறும் ஆசனங்கள் மட்டுமல்ல. அது மிகவும் ஆழமான பொருள் கொண்டதாக இந்தியத் தத்துவ மரபில் பயன்படுத்தப்படுகிறது. யோகம் என்பதன் வேர்ச் சொல் யுஜ், அதாவது இணைவது. மனித வாழ்வு பரம்பொருளுடன் இரண்டறக் கலக்கும் இணைவைத் தான் யோகம் என்று பண்டைய இந்தியத் தத்துவங்கள் கூறுகின்றன. இத்தகைய இணைவை அடையப் பல விதமாக வழிமுறைகளைத் தத்துவ ஞானிகள் முன்வைத்தார்கள். கர்ம யோகம், ஞான யோகம், ராஜ யோகம், பக்தி யோகம் ஆகியவை அவற்றில் பிரதானமான வழிமுறைகள். பரம்பொருளுடன் இணைய ஞானம், பக்தி, செயல் முதலானவற்றை இந்த வழிமுறைகள் பரிந்துரைக்கின்றன. ராஜ என்னும் சொல் யோகங்களுக்கெல்லாம் தலையாயது என்னும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது. யோகம் என்பதைச் சில பயிற்சிகளின் மூலம் அடையும் வழிகளை ராஜ யோகம் முன்வைக்கிறது. இந்தப் பயிற்சிகளை அன்றாட வாழ்வில் கடைபிடிப்பதன் மூலம் ஒருவர் பரம்பொருளுடன் இரண்டறக் கலக்கலாம் என்று இது பரிந்துரைக்கிறது.

எட்டு அங்கங்களைக் கொண்ட இந்தப் பயிற்சியில் ஒரு பகுதிதான் ஆசனம் என்பது. இன்னொரு பகுதி பிராணாயாமம். இவை இரண்டும்தான் இன்று யோகா என்னும் பெயரில் அதிகம் கற்பிக்கப் பட்டுப் பயிற்சி செய்யப்படுகின்றன.

எட்டு அங்கங்கள்

யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவையே ராஜ யோகத்தின் எட்டு அங்கங்கள்.

யமம் என்பது ஒரு சாதகன் (மோட்சம் அடைவதற்கான முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவன்) செய்ய வேண்டிய கடமைகள். அஹிம்சை, சத்தியம், கள்ளாமை, பிரம்மச்சரியம், இரக்கம், ஜபம், பொறுமை, திடம், மிதமான உணவு, பரிசுத்தம் ஆகிய பத்தும் யமம் என்பதில் அடங்கும்.

நியமம் என்பது அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்கள். உடல் சுத்தம், தியான நேரம், அளவான உறக்கம், அளவான சாப்பாடு, தவறு செய் வதற்கு அஞ்சுதல், ஜபம், விரதம் போன்றவை இதில் அடங்கும்.

ஆசனம் என்பது உடலைப் பண்படுத்தும் பயிற்சிகள். பிராணாயாமம் என்பது மூச்சுப் பயிற்சி. இந்தப் பயிற்சியின் மூலம் பிராண சக்தியை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் செலுத்தலாம். ஆசனமும் பிராணாயாமமும் உடலின் உள் உறுப்புகள், வெளி உறுப்புகளை ஆரோக்கியமாகவும் செயல்திறனுடனும் வைத்திருக்கும். மனதை அமைதிப்படுத்தி அறிவின் கூர்மையை அதிகரிக்கச் செய்யும். தியானத்துக்குத் தேவையான கவனக் குவிப்பு இந்தப் பயிற்சிகளின்போது நன்கு வசப்பட்டுவிடும்.

பிரத்யாஹாரம் என்பது வெளி முகமாக ஈர்க்கப்படும் புலன்களை உள்முகமாகத் திருப்புதல். ஒவ்வொருவரும் தமக்கென்று அமைந்துள்ள அன்றாடக் கடமைகளைப் பயனை விரும்பாமல் கடைபிடித்தலும் பிரத்யாஹாரத்தில் வரும்.

தாரணை என்பது ஏதேனும் ஒரு பொருளில் மனதை நிறுத்துவது.

தியானம் என்பது அதிலேயே ஆழ்ந்திருப்பது.

சமாதி என்பது அதிலேயே ஐக்கியமாகிவிடுவது.

நுட்பமாகப் பார்த்தால் இந்த எட்டு அங்கங்களும் ஒன்றுக்கொண்று துணை புரிவதாகவும் படிப்படியான வளர்ச்சிக்கு வழிவகுப்பனவாகவும் இருப்பதை உணரலாம்.

இவை அனைத்தும் ராஜ யோகம் எனப்படும் வழிமுறையில் உள்ளவை. கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் ஆகியவை முறையே செயல், ஞானம், பக்தி ஆகியவற்றின் வழியே யோகம் என்னும் லட்சியத்தை அடைய வழிகாட்டுகின்றன. ராஜ யோகமோ நமது நடத்தை, பழக்க வழக்கம், உடல் திறன், மன ஒருமைப்பாடு ஆகியவற்றின் மூலம் யோகத்தை அடைய வழிகாட்டுகிறது. உடலுக்கும் நடத்தைக்கும் முக்கியத்துவம் தரும் யோகம் என்றும் இதைச் சொல்லலாம். இதன் ஒரு பகுதிதான் ஆசனமும் பிராணாயாமமும்.

யோகி என்பவர் யார்?

கர்ம, ஞான, ராஜ, பக்தி ஆகிய யோகங்களைத் தாண்டி யோகம், யோகி என்னும் சொற்கள் பல இடங்களில் தனியாகவும் தத்துவ நூல்களில் பயன்படுத்தப்படுகின்றன. முதலிலேயே குறிப்பிட்டபடி ஜீவனும் பிரம்மமும் இணைதல் யோகம். இதற்கேற்பத் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர்கள் யோகிகள். வெறுமனே யோகாசனம் செய்பவர்கள் யோகிகள் அல்ல. உடல், உணவு, மனப்போக்கு, சிந்தனை முறை, வாழ்வை அணுகும் முறை, கண்ணோட்டம் எனப் பல அம்சங்களைத் தழுவி விரிவது யோகம்.

ஊருக்கு உழைத்திடல் யோகம் என்று பாரதியார் சொல்கிறார். யோகம் என்பதை அதிருஷ்டம் என்னும் எளிய பொருளில் பயன்படுத்துகிறாரோ என்ற ஐயம் எழலாம். நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம் என்கிறார் அடுத்த வரியில். பொதுநலனுக்காகச் செய்யப்படுவதுதான் யாகம் என்கிறார். பகவத் கீதையில் யக்ஞம் (யாகம்) என்பதற்கான விளக்கத்தைப் பார்த்தால் பாரதியார் சொல்வது அதற்கு நெருக்கமாக இருப்பதை உணரலாம். ஆகவே யோகம் என்பதை அதிருஷ்டம் என்னும் பொருளில் பாரதியார் பயன்படுத்தவில்லை. ஊருக்குழைத்திடல், அதாவது தன்னலமற்ற தொண்டு யோகம் என்கிறார். இங்கு அவர் கர்ம யோகத்தைக் குறிப்பிடுகிறார் என்று கொள்ளலாம்.

மெய்ஞானம் யாது?

போருக்கு நின்றிடும்போதும் உளம் பொங்கலில்லாத அமைதி மெய்ஞானம் என்று அடுத்த வரிகளில் சொல்கிறார். நெருக்கடிகள், சவால்கள் எனப் புறச் சூழல் எப்படி இருந்தாலும் அதனால் பாதிக்கப்படாத சமநிலை கொண்டவனை யோகி என பகவத் கீதை சொல்கிறது. யோகி என்பவரைப் பற்றி, “யஸ்மான்னோ த்விஜதே லோகஹ, லோகான்னோ த்விஜதே சயஹ” என்று கீதை சொல்லும் வரியின் பொருள் இதுதான்: யார் இந்த உலகத்தால் பதற்றமுறாமல் இருக்கிறாரோ, யாரால் இந்த உலகம் பதற்றமுறா மல் இருக்குமோ அவரே யோகி.

கீதையின் இன்னொரு ஸ்லோகத்தில் உணவு, பேச்சு, உறக்கம், நடமாட்டம் ஆகியவற்றில் ஒரு அளவுடன் இருப்பவர் யோகி என்று சொல்லப்படுகிறது. செய் வதைத் திறமையாகச் செய்வதே யோகம் என்றும் சொல்லப்படுகிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது யோகம் என்பது எல்லைக்குட்பட்ட வாழ்வை எல்லைக்கு அப்பாற்பட்ட சக்தியுடன் இணைப்பது என்றும், எதற்கும் பதறாத, சமநிலை தவறாத நிலையே அதற்கான வழிமுறை என்பதும் தெளிவாகிறது. கர்ம, ஞான, பக்தி, ராஜ யோகி என யாராக இருந்தாலும் இந்த அணுகுமுறை அவர்களுக்குக் கைவர வேண்டும். அசாத்தியமான சில சக்திகள் கொண்டவர்களைச் சித்த புருஷர்கள் என்றும் யோகிகள் என்றும் சொல்வார்கள். இந்த சக்திகள் யோகத்தின் பாதையில் செல்பவர் களுக்கு இயல்பாய் கிடைக்கும் சில அனுகூலங்கள். இவற்றால் கிடைக்கும் பெருமிதங்களையும் பலன்களையும் முக்கியமாகக் கருதாமல் தொடர்ந்து எல்லையற்ற சக்தியை நோக்கிய பாதையில் பய ணிப்பவரே உண்மையான யோகி.

யோகம் என்பது சித்தத்தில் எழும் விருத்திகளை அடக்குதல் என்று பதஞ்சலி முனிவர் சொல்கிறார். சித்த விருத்திகள் என்பவை சித்தத்தின் இயக்கங்கள் என்கிறார் பாரதியார். அதாவது மனம், அறிவு, சித்தம், அகங்காரம் ஆகியவை அடங்கிய உட்கருவி என்கிறார் பாரதியார். இவையனைத்தையும் சேர்த்துச் சித்தம் எனச் சொல்வது யோக சாஸ்திர வழக்கு என்று சொல்லும் பாரதியார், சித்தத்தின் இயக்கங்களை நிறுத்துதலே யோகம் என விளக்கமளிக்கிறார்.

நிச்சலனமான நதியோடு இந்த நிலையை ஒப்பிடலாம். சலனமற்ற, எதிர்பார்ப்புகளோ ஏமாற்றங்களோ அற்ற நிலை. அதிகாரத்தை எந்த வகையிலும் நாடாதிருத்தல். தவிப்புகள் அற்ற, ஊசலாட்டங்கள் அற்ற நிலை. பதற்றங்கள் அற்ற, சமநிலை கொண்ட இயல்பும் நடத்தையும். இன்பத்தையும் துன்பத்தையும், வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதுதல். இதுவே யோகத்தின் அடிப்படை. இதுவே யோகியின் அடையாளம்

Friday, July 27, 2018

சொர்க்கத்திற்குள் நுழைவது இலவசம்

♥ஓர் முதியவர் தனது பேரனிடம்.:

♥பேரனே! சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.

♥பேரன்: அது எப்படி தாத்தா?

♥முதியவர்: சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்

♥மது அருந்த பணம் வேண்டும்

♥சிகரெட் புகைக்க பணம் வேண்டும்

♥கூடாத இசை கேட்க பணம் வேண்டும்

♥பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்,

♥ஆனால் மகனே!

♥அன்பு காட்ட பணம்
தேவையில்லை

♥கடவுளை வணங்க பணம்
தேவையில்லை

♥சேவை செய்ய பணம் தேவையில்லை

♥விரதம் இருக்க பணம் தேவையில்லை

♥பாவமன்னிப்பு கோர பணம் தேவையில்லை

♥பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை

♥நம் உரிமையை நிலைநாட்ட
பணம் தேவையில்லை

♥இத்தனைக்கும் மேலாக இறைவன் "நாமம்"சொல்ல வேறெதுவும் தேவையில்லை
மகனே!
நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?

♥இலவசமான சொர்க்கத்தை நேசிக்கிறாயா?

♥முதியோரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது.

♥இந்த பகிர்வும்  இலவசம். இதனை ஏனையோருடமும் பகிரவும்
இலவசமாக.

♥தினம் தவறாமல் நிச்சயம் இறைவன் நாமம் சொல்வோம்......

Sunday, June 17, 2018

கோபம் என்ன செய்யும்

நாம் ஏன் கோபத்தில் சத்தம் போடனும் கோபம் வந்தா என்ன செய்வோம்?
யார்மேல நமக்கு கோபமோ, அவங்ககிட்ட சத்தம்போட்டு சண்டைபிடிப்போம்!! இல்லையென்றால் பேசாம அமைதியா இருந்துடுவோம்!
ஆனா, எப்பவாவது யோசிச்சிருக்கோமா? யார்மேல நமக்கு கோபம் வந்தாலும் அவர்கள் நமக்கு மிக அருகில்தானே இருக்காங்க!
எதுக்கு ஊருக்கே கேட்கிறமாதிரி சத்தம் போடனும்?
மெதுவா சொல்லவேண்டியதை சொன்னாலே அவங்களுக்கு கேட்குமே!
நானும் யோசிச்சதில்லைங்க!
ஆனா இந்த கதையைப் படித்தபிறகு??????

ஒரு துறவி கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறும் சமயம், அவ்விடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதைப் பார்த்த துறவி, தன் சீடர்களிடம் திரும்பி சிரித்துக்கொண்டே கேட்கிறார்?
ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும்போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம்போட்டு சண்டை பிடிக்கிறார்கள்?

சீடர்கள் சில நிமிடங்கள் சிந்திக்கிறார்கள்.....பின்னர்..
சீடர்களில் ஒருவர்: கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம்!
அதனால் சத்தமிடுகிறோம்!

துறவி: ஆனால், உனக்கு மிக சமீபத்தில் இருக்கும் நபரிடம், ஏன் சத்தமிடுகிறாய்?
அவர்கள் உன்னருகில்தானே நிற்கிறார்கள்!
நீ சொல்ல வேண்டியதை அவர்களுக்கு மட்டும் கேட்கும் விதமாக எடுத்துறைக்கலாமே!

ஒவ்வொரு சீடரும் ஒரு காரணம் சொல்கிறார்......
ஆனால் எந்த காரணத்திலும் அடுத்தவர்களுக்கு உடன்பாடில்லை!

கடைசியாக துறவி பதில் கூறுகிறார்.....
எப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது! எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிடுகிறார்கள்!

மனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இவர்கள் தங்கள் ஆற்றலை உபயோகித்து சத்தம்போட வேண்டியிருக்கும்!

அப்பொழுது தானே தங்கள் கருத்து வெகு தொலைவில் இருக்கும் மனதைச் சென்றடையும்!
ஆனால் இதுவே, இரு மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது?

அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சத்தமிடுவதில்லை! அமைதியாகவும், அன்பான முறையிலும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவார்கள்!
காரணம் அவர்களின் மனது இரண்டும் வெகு சமீபத்திலே இருக்கும்!
மனதிற்கு இடையேயான தூரம், மிகக் குறைவாக இருக்கும் அல்லது மனதிரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும்!

துறவி தொடர்ந்து கூறுகிறார்...
இதைவிடவும் அதிகமாக ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது என்ன நடக்கும்?
அவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பேச தேவையிருக்காது! அவர்களின் மனதுகள் இரண்டும் கிசுகிசுப்பாக பேசுவதில் இருந்தே, அவர்களின் கருத்துகள் பரிமாறப்படும்!
இன்னும் இன்னும் அன்பு அதிகமாகும்போது வார்த்தையே தேவைப்படாது!
அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போதே, மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டுவிடும்!

துறவி கடைசியாக சீடர்களைப் பார்த்து கூறுகிறார்,
அதனால் நீங்கள் ஒருவருடன் ஒருவர் வாதிடும்போது,
"உங்கள் மனதுகள் இரண்டும் தொலைவாகப் போய்விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!
மனதின் தொலைவை அதிகப்படுத்தும் வார்த்தைகளைஉபயோகப்படுத்தாதீர்கள்!"

அப்படி செய்யாமல் போனால், "ஒருநாள் உங்கள் மனங்களிரண்டின் தூரம் கொஞ்ஞம் கொஞ்ஞமாக அதிகமாகி, கடைசியில் ஒன்றுசேரும் பாதையே அடைக்கப்பட்டுவிடும் நிலை வந்துவிடும்!"".
"வாழ்க வளமுடன்"

Monday, May 28, 2018

வாழ்க்கையை கொண்டாடுங்கள்

வாழ்க்கையை கொண்டாடுங்கள் (Happiness in Life)

தினம் ரூபாய் 86400/-.
 
ஒரு சின்ன கற்பனை. விருப்பமுடன் படியுங்கள்

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.
பரிசு என்னவென்றால் -ஒவ்வொரு நாள் காலையிலும்
உங்கள் வங்கிக் கணக்கில் 86,400. ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.

ஆனால் இந்தப் பரிசுக்கு சில நிபந்தனைகள் உண்டு. அவை -

1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத
பணம் " உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.

2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு கணக்கிற்கு மாற்றமுடியாது.

3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு

4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய்வரவு வைக்கப்படும்

5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.

6) வங்கி -"முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவு தான்.
வங்கிக் கணக்கு மூடப்படும்,மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.

இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?
உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள்மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள் இல்லையா?

உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால் அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக
மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் -அப்படித்தானே?

முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே? உண்மையில் இது ஆட்டமில்லை-
நிதர்சனமான உண்மை

ஆம் நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.

அந்த ஆச்சரிய வங்கிக் கணக்கின் பெயர் -காலம்.

ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும்போது வாழ்க்கையின்
அதியுன்னத பரிசாக 86400 வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.

இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப்படுவதில்லை. அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள் தொலைந்தது தொலைந்தது தான்.நேற்றைய பொழுது போனது போனது தான்.

ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம் கணக்கில் 86400 வினாடிகள்.
எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வங்கி உங்கள் கணக்கை முடிக்க முடியும்.

அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உண்மையில் 86400 வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு வாய்ந்தது அல்லவா?

இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா?
 
வாழ்க்கை என்பது ஒருமுறை தான் அதை மகிழ்ச்சியுடனும் , உறவுகளுடனும் , மனிதனேயத்துடனும் இறைவனுக்கு   ஏற்ற வாழ்க்கையாக வாழ்வோம் 
  
வாழ்க்கையை வாழவே பணம் தேவை , பணத்தை சேர்க்க வாழ்வு அல்ல !
காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும்.  சந்தோஷமாகஇருங்கள் 

மீண்டும் பிறப்போம் என்பது நிச்சயம் இல்லை , மீண்டும் அம்மா,அப்பா, சகோதரர்கள் ,சகோதரிகள் ,நண்பர்கள் ,உறவுகள் வருவது இல்லை !
சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள். வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.


Saturday, May 19, 2018

அப்பாவின் கடிதம் மகனுக்கு

தந்தை தன் மகனுக்கு எழுதிய அறிவு சொத்து பத்திரம்.....பத்திரமாக ஆழ்மனதில் பதித்துக்கள் கொள் மகனே

அன்புள்ள மகனுக்கு, மகளுக்கும் பொருந்தும்

மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்.

1. வாழ்க்கை, அதிர்ஷ்டம், நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை. தாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை. சில கருத்துக்களை அறிவுரைகளை சரியான நேரத்தில்(முன் கூட்டியே) கூறி விடுவது நல்லது.

2. நான் உன்னுடைய தந்தை. நான் உனக்கு இதனை கூறாவிடில் உனக்கு இதனை யாரும் கூறப்போவதில்லை.

3. நான் உனக்கு எழுதுவது யாதெனின், எனக்கேற்பட்ட சிறு அளவிலான சொந்த அனுபவங்களேயாகும். இது ஒரு வேளை தேவையற்ற அதிகப்படியான இதய வலிகளிலிருந்து உன்னைக் காக்க இயலும்.

கீழ்க் கண்டவற்றை நீ உன் வாழ்க்கை முழுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும்:

1. உன்னிடத்தில் நல்லவர்களாக நடந்து கொள்ளாதவரிடம் நீ உன் வன்மத்தை, பொல்லாங்கை காட்டாதே. உன் அம்மாவையும் என்னையும் தவிர உன்னை நல்ல விதமாக நடத்தி செல்லும் பொறுப்பு எவருக்குமில்லை.

உனக்கு யாராவது நல்லவர்களாக இருப்பின் அது உனக்கு கிடைத்த புதையல், பொக்கிஷம் போன்றதாகும். அவர்களுக்கு நீ நன்றி உடையவனாக இரு. மேலும் நீ அவர்களிடத்தில் கவனமாக நடந்து கொள்ளுதல் அவசியம். ஏன் எனில், ஒவ்வொருவரின் அணுகு முறையும் ஏதேனும் ஒரு நோக்கத்துடனேயே இருக்கிறது. உன்னிடத்தில் ஒரு மனிதன் நல்லவனாக நடந்து கொள்கிறான் என்றால், உன்னை அவன் உண்மையாக நேசிக்கிறான் என்று அர்த்தம் இல்லை. நீ விழிப்புடன் இருக்க வேண்டும். அவனை நீ ஆய்ந்தறியாமல், மதிப்பிடாமல் உண்மையான் நண்பன் என்று கொள்ளாதே.

2. இந்த உலகில் இன்றியமையாதது என்று ஒன்று இல்லை. உனக்கு உடமையானது என்று எதுவும் இந்த உலகில் இல்லை. இந்த கூற்றினை நீ புரிந்து கொண்டாய் என்றால், உன்னை சுற்றி மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும், எவரும் தேவை இல்லை என்றாலும் அல்லது நீ அதிகமாக விரும்பிய ஒன்றையோ/ ஒருவரையோ நீ இழக்க நேர்ந்தாலும் உன் வாழ்க்கையை நீ எளிதில் வழி நடத்திச் செல்ல இயலும்.

3. வாழ்கை என்பது மிகவும் குறுகிய காலத்திற்கு உட்பட்டது. இன்றைய வாழ்க்கையை நீ வீணடித்தாய் என்றால் உன் வாழ்க்கை உன்னை விட்டு சென்று விட்டதை நாளை நீ கண்டு கொள்வாய்.

வாழ்க்கையின் மதிப்பினை நீ எவ்வளவு விரைவில் உணர்ந்து கொள்கிறாயோ ஓரளவாகிலும் நீ வாழ்வினை அனுபவிப்பாய்.

4. அன்பு தான் என்றாலும் அது உறுதியற்ற ஒரு உணர்வே ஆகும். காலத்தை பொருத்தும் ஒருவரின் மனநிலையை பொருத்தும் இந்த உணர்வு மங்கி குறைந்து விடுகிறது. உன்னை மிகவும் நேசித்தவர் உன்னை விட்டு விலகிச் செல்லும் பொழுது நீ அமைதியாக இரு. காலம் உன் வலிகளையும் கவலைகளையும் துடைத்தழித்துக் கொண்டு போய்விடும். இனிமையான அன்பையும், அழகையும் நீ மிகையாக எண்ணாதே. அன்பில்லாமல் போகின்ற தருணத்தில் ஏற்படும் கவலைகளையும் நீ பெரிதாகக் கொள்ளாதே.

5. வெற்றி பெற்ற நிறைய மனிதர்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள் இல்லை. நீ சிரமப்பட்டு கல்வி பயிலாவிடினும் வெற்றி பெற இயலும் என்பது இதன் பொருள் இல்லை. என்னென்ன அறிவுத்திறனை நீ பெற்றிருக்கின்றாயோ அது வாழ்க்கையில் உனக்கான ஆயுதங்களாகும். ஒரு சிலர் வாழ்க்கையில் உயர்கின்ற தருணத்தில் இன்னல்களை அனுபவிக்கின்றனர். ஒரு சிலர் துவக்கத்திலேயே இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.

6. என்னுடைய வயதான காலத்தில், உன்னுடைய வருமானத்தை சார்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை. அதே போன்று உன்னுடைய வாழ்க்கை முழுவதும் நான் உனக்கு நிதி ஆதாரங்களை அளிக்க இயலாது. உன்னை வளர்த்து ஆளாக்கும் வரையில் தான் என்னுடைய ஆதரவும் பொறுப்பும். நீ வளர்ந்து விட்ட பிறகு இந்த பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. அதன் பிறகு நீ தான் முடிவு செய்ய வேண்டும். நீ பயணிக்கப் போவது பொது போக்குவரத்திலா அல்லது உன் சொந்த வாகனத்திலா, ரதத்திலா வசதி படைத்தவனாகவா அல்லது ஏழையாகவா என்று.

7. நீ கூறும் வார்த்தைகளுக்கு நீ மதிப்பளிக்க வேண்டும். ஆனால் பிறர் அவ்வாறு இருத்தல் வேண்டும் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது. நீ அனைவருக்கும் நல்லவனாக இரு. ஆனால் உனக்கு அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பாராதே. நீ இதனை புரிந்து கொள்ளாமல் போனால் உன் வாழ்க்கை தேவையற்ற பிரச்சினைகளில் உழல வேண்டி இருக்கும்.

8. நான் பல வருடங்களாக பரிசு சீட்டுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் எந்த பரிசும் எனக்கு அடித்ததில்லை / கிடைக்கவில்லை. நீ வசதி படைத்தவனாக வேண்டுமென்றால் நீ கடினமாக உழைக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. இலவசமாக உணவு கிடைக்காது.

9. நான் உன்னுடன் எவ்வளவு அதிகப்படியான நேரம் இருக்கிறேன் என்பது ஒரு பொருட்டல்ல. நாம் ஒன்றாக இணைந்திருக்கும் அந்த நேரத்தை பெரும் பாக்கியமாகக் (பொக்கிஷம்) கருதுவோம். நமக்கு தெரியாது நாம் மறுபடியும் நம்முடைய அடுத்த பிறவியில் சந்திப்போம் என்று.

அன்புடன் ,
உன் அப்பா.

இக் கடிதம் புகழ் பெற்ற ஹாங்காங் தொலைக் காட்சி ஒளிபரப்பாளர், குழந்தை உளவியல் நிபுணரால் அவருடைய மகனுக்கு எழுதப்பட்டது.

இக் கடிதத்தில் உள்ள வார்த்தைகள், கருத்துக்கள் அனைவருக்கும் பயனளிப்பதாகும்.

அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு இதனை படிப்பினையாக கற்பிக்கலாம். யான் மகனா இருந்த போதும் எங்க அப்பா காலத்தில் அவருக்கும் இந்த அறிவு சொத்து கிடைக்கவில்லை .  

தோற்க கற்றுக் கொள்வோம்

தோற்க கற்றுக்கொள்வோம் என்ன  இது புதுசா இருக்கு?   எல்லாரும் வாழ்க்கையில வெற்றி பெறனும், எல்லாத்துலயும் முதலா வரணும்னு தான் சொல்லுவாங்க. இங்...